இன ஐக்கியத்துக்கு எடுத்துக்காட்டாக வாழும் ரம்புகந்தை முஸ்லிம் கிராமம்! - sonakar.com

Post Top Ad

Friday 25 January 2019

இன ஐக்கியத்துக்கு எடுத்துக்காட்டாக வாழும் ரம்புகந்தை முஸ்லிம் கிராமம்!


எமது நாட்டின் வரலாற்றில் தொடர்ந்தும் ,பேரினவாத போக்குள்ள ஒரு சில அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களை பலி கொடுத்தே  தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துள்ளனர். யுத்தம் முடிந்தும் கடந்த அரசு இனவாதத்தை தொடர்ந்ததானது ,நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மட்டுமன்றி  அரசையும் ஆட்டம் காண வைத்தது.நாட்டின் ஆங்காங்கே இடம்பெற்ற இன முறுகல்நிலை கடந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காரணமாகியது. 

இவ்வாறான இன மோதல்களுக்கு முகம் கொடுக்காது ,சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழும், கிராமங்களில் ஒன்று தான் ரிதீகம ஆகும்.குருநாகல் நகரில் இருந்து 8 கி.மீ.தூரத்தில், 2000 வருடத்துக்கு முந்திய வரலாற்று அடையாளச்சின்னமாக ,வட மேல் மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்கு ரம்புக்கந்தை என்ற பகுதியில் தான் சுமார் 600 முஸ்லிம் குடும்பங்கள்  வாழ்ந்து வருகின்றனர். ரிதீ விகாரை எனப்படும் குகை விகாரையும் ரம்புக்கந்தை கிராமத்துக்கு வடக்கே அமைந்துள்ளது.


1808ம் ஆண்டு சிறிவிக்ரமசிங்க மன்னரின் ஆட்சிக்காலத்தில் , சுமார் 13 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்திருந்தாலும் , மன்னருடன் பரிசுகளை பரிமாறி, சிறந்த நற்பை பேணி வந்துள்ளனர்.ஒருமுறை மன்னருக்கு, ரம்பக்க(வாழைப்பழம்) மரவையை பரிசாக மக்கள் வழங்கியதால் ,காலப்போக்கில்"ரம்பகந்தைதெனிய" என இக்கிராமம் பெயர் பெற்றது.



கல்வி பொதுத்தராதரம் உயர்தர தகுதி கொண்ட ,முஸ்லிம் ,சிங்கள பாடசாலைகள் 2 இப்பகுதியில் உள்ளன. அவ்வாறே ஒரு ஜூம்மா பள்ளி , கிராமத்தின் மத்தியிலும் 4 தக்கியா பள்ளிகள் சிங்கள மக்கள் வாழும் பகுதியிலும்  இணைந்து ள்ளதாக  அமையப்பெற்றுள்ளன. 

இதனால் பெரும்பான்மை மக்களுடன் சகோதரத்துவத்துடன்,  முஸ்லிம் மக்கள் ஒன்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.அங்கு சென்ற போது திப்பாட்டுவாவே சிறி சுமங்கல நாயக்க தேரோ எம்மை அன்புடன் வரவேற்று உபசரித்ததுடன் தமது பிரதேசத்தில் முஸ்லிம்களின் வரலாறு மற்றும் ஒற்றுமை குறித்து பெருமையுடன் எடுத்துக் கூறினார்.

இது பற்றி ஜூம்மா பள்ளியின் செயலாளர் ஜனாப் யூசூப் லெப்பை மொஹமட் ஹாரிஸ் விளக்கமளிக்கையில்" ரதீவிகாரை நிருவாகத்தினருடன் நீண்ட கால நற்புறவை பேணி வந்ததால் தான்,இவ்விகாரையை, நீண்ட காலமாக பொறுப்பேற்று, நிருவாகித்து வந்த மல்வத்தபார்சவ திப்பட்டுவே புத்த ரக்சித்த ஹிமி அவர்கள்,தலதா மாளிகையின்  உயர் பதவியை பொறுப்பேற்ற போது, எமது ரம்பக்கந்தனை கிராம மக்கள் தான் முதன்முதலில் தோரனைகளை அமைத்து ,கெளரவித்து வரவேற்பு வழங்கினர்.எமது பள்ளிக்காணியின் விபரமும் அவர்களது பழமை வாய்ந்த ஏட்டில் விபரிக்கப்பட்டுள்ளது.

எமது பள்ளிக்காணியின் வழக்கொன்றுக்குகூட  நீதிமன்றம் வரை வந்து, எமக்காக ஒரு உயரிய பதவியில் இருக்கும், பெளத்த மத குருவான இவ்விகாராதிபதி  சாட்சியமளித்ததை  ,எம் வாழ்வில் என்று மறக்க முடியாது.அவ்வாறே ரிதீ விகாரையின் விசேட நிகழ்வுகளில் நாம் ஒன்று படுவோம்.இக் கிராம முஸ்லிம் மக்களும் "எமது ரிதீவிகாரை" என்றே அழைப்பர்.


அண்மைக்காலங்களில் இலங்கையின் பல இடங்களில் ,முஸ்லிம்களுடனான இன மோதல்கள் இடம் பெற்று வந்தமை யாவரும் அறிந்த ஒன்றாகும்.அந்தவகையில் "எப்போதாவது இந்தக்கிராமமும் இனவாத பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த ஏதாவது ஒரு சந்தர்பம் உண்டா" என ரம்பக்கந்தை ஜும்மா பள்ளிவாயல் தலைவர் ஜனாப் ஜெபுர்டீன் மொகமட் பாரீஸ் அவர்களை கேட்ட போது"2017 ம் ஆண்டு 'தஹதுன்வஹன்சே வந்தனா' என்ற புனித பெளத்த யாத்திரை எமது ரம்பக்கந்தை கிராமம் ஊடாகவே இலங்கையின் பல பகுதியிருந்தும் மக்கள்மேற்கொண்டனர்.


சுமார் 4 கி.மீ.  வரை, நடந்தே இக்கிராமம் ஊடாக யாத்திரிகர்கள் சென்றனர்.மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தெருவிளக்குகளுக்கான மின்சார வசதி ஒழுங்கு படுத்தியதுடன், ஆண் பெண்களுக்கு பிரத்தியேக மலசல கூடங்கள்,சுத்தமான குடிநீர்,முதலுதவி எம்ப்யூலன்ஸ்,வாகன தரிப்பிட வசதிகள் என்பவற்றுடன் அவர்களுக்கு தேவைப்பட்ட அனைத்து வசதிகளையும் , எமது கிராம மக்கள் பள்ளிவாசல் நிருவாகத்தினருடன் இணைந்து,ஏற்பாடு செய்து , ,முடிந்தவரை சேவைகளை செய்து கொடுத்தனர்.

உணவு விடயத்திலும் அவ்வாறே .நோன்பு காலங்களில் எமது மக்கள் குடிக்கும் , விசேடநிறையுணவான கஞ்சி செய்து 2 நாட்கள் வியோகித்ததுடன் 3ம் நாள் கோப்பி பானமும் வழங்கினோம்.அவர்களுக்கான பாதுகாப்பையும் வழங்கி ,கெளரவமாக கவனித்து, வருகை தந்த அனைவரையும் சந்தோஷப்படுத்தினோம்.

பல விகாரைகளிலிருந்து இங்கு வருகை தந்த பிக்குமார்கள், எம்மை தொடர்பு கொண்டதுடன்,உயர் பதவிகள் வசிக்கும் பல அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வுக்கு வந்த போது , எம்மை பாராட்டியதுடன் மகிழ்வுடன் எம்மோடு உறவாடினர். இதன் போது எமது கிராமத்தின் ஞாபகச்சின்னமும் வழங்கப்பட்டது.

அன்று தொட்டு இன்று வரை எமக்குள் எந்த பேதமும் வந்ததில்லை.நாம் ஒருவருக்குள் ஒருவராக ஒற்றுமையாக இன பேதமின்றி வாழ்ந்து வருகிறோம்"என்றார்.


ரிதிவிகாரையின் பன்முகத்தன்மைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு ,இங்கு ஒல்லாந்த ஆட்சிக்காலத்தின் ஆளுனர் பொப் என்பவரால் ,கிரிஸ்தவ விவிவியத்தை சித்தரிக்கும் சித்திரங்கள் கொண்ட, நூற்றுக்கணக்கான டைல்ஸ்கள் மலர் வைக்கும் பிரதான பலிபீடத்தில் பதிக்கப்பட்டுளமையே. இது எக்காலமும், நற்புடன் பல்லின மக்களுடன் ரிதீவிகாரை-பெளத்த பிக்குகள் வாழ்ந்தமைக்கு சான்றாக உள்ளன. 

இவ்விகாரையின் பிக்குகளில் ஒருவரான, காசியப்ப என்பவர் கருத்து தெரிவித்த போது "நாம் முஸ்லிம் மக்களுடன் நல்லுறவை பேணி வருகிறோம்.இப்பகுதி வாழ் முஸ்லிம் மக்களும், எமது பெரகர,வெசாக் போன்ற நிகழ்வுகளுக்கு , அனுசரனை வழங்குகின்றமை எமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அத்துடன் முஸ்லிம் மக்களின் பாவனைக்காக எம்மால் காணிகளும் வழங்கப்பட்டுள்ளது "என குறிப்பிட்டார்.


பன்முகத்தன்மையுடன் கூடிய சகவாழ்வுக்கு உதாரணமாக ரிதீகமை மக்கள் வாழ்கின்றனர்.

-காமிலா பேகம்

1 comment:

Post a Comment